ஜெயங்கொண்டம் நகராட்சி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்


ஜெயங்கொண்டம் நகராட்சி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் நகராட்சி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

தற்செயல் விடுப்பு போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பொது பணியாளர்கள், கணினி, சுகாதாரம், பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி, மாநகராட்சி அலுவலக மாநில தலைவர் முருகானந்தம் தலைமையில் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்கள் என அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்திட வேண்டும்.

கொரோனா ஊக்க தொகை

அலுவலக நேரத்தில் ஆய்வு கூட்டங்களை நடத்திட வேண்டும். காணொலி வாயிலான கூட்டங்களை குறைத்திட வேண்டும். அரசு விடுமுறை நாட்கள், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்திடுவதை கைவிட வேண்டும். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்க தொகை வழங்கிட வேண்டும்.

தொழில்நுட்ப ஊழியர்களுக்கு 10 ஆண்டுகள் முடிந்தவுடன் பதவி உயர்வு வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில் பண பயன்களை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story