தண்ணீர் திருட்டை தடுக்க கூட்டுக் கண்காணிப்பு குழு


தண்ணீர் திருட்டை தடுக்க கூட்டுக் கண்காணிப்பு குழு
x
தினத்தந்தி 5 Oct 2023 7:30 PM GMT (Updated: 5 Oct 2023 7:30 PM GMT)

வறட்சி காலத்தில் நீர் திறக்கப்பட உள்ளதால் கால்வாயில் இருந்து தண்ணீர் திருடுவதை தடுக்க கூட்டுக் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று ஜமீன்ஊத்துக்குளி பாசன சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்
பொள்ளாச்சி அருகே நஞ்சேகவுண்டன்புதூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜமீன்ஊத்துக்குளி பாசன சபை மற்றும் பாசன சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்தும், தண்ணீர் திருட்டை தடுப்பது, எதிர்பார்க்கப்படும் பாசன நாட்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் புதிய ஆயக்கட்டு பாசன நலச்சங்க தலைவர் அசோக், செயலாளர் பிரபாகரன், ஜமீன்ஊத்துக்குளி பாசன சபை தலைவர் காளிதாஸ் மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து திட்டக்குழு தலைவர் செந்தில் கூறியதாவது:-

ஆழியாறு அணை மூலம் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆழியாறு புதிய ஆயக்கட்டில் மொத்தம் 44 ஆயிரத்து 350 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பாசனத்திற்கு அ, ஆ என இரு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை சரிவர செய்யாத காரணத்தினால் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை.

இதன் காரணமாக வழக்கமாக 90 நாட்கள் திறக்கப்படும் தண்ணீருக்கு பதிலாக இந்த ஆண்டு 30 நாட்கள் மட்டுமே பாசனத்திற்கு நீர் வழங்க முடியும் என அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் வருகிற 11-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், ஆழியாறு அணையின் நீர்இருப்பை அதிகப்படுத்த வேண்டும். மேலும் வறட்சி காலத்தில் தண்ணீர் திறப்பதால் கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க கூட்டுக் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story