காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட ஆய்வு கூட்டம்


காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட ஆய்வு கூட்டம்
x

காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது.

காஞ்சிபுரம்

ஆய்வு கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக நல்லுறவு மைய கூட்டரங்கில் காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில் கலைஞர் உரிமை திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் உரிமை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டதில் பயன் பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக 550 முகாம்கள் 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரையிலும், 2-வது கட்டமாக 193 முகாம்கள் அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

வருமான சான்று

விண்ணப்பத்தை பெற்று கொண்ட குடும்பத்தலைவிகள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வரவேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் போன்றவற்றை எடுத்து வரவேண்டும். விண்ணப்பத்துடன் எந்த வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய்த் துறையில் வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எந்த வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெற தேவையில்லை.

விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.

பயோமெட்ரிக் கருவி மூலம்

விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களும் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெறும். ரேஷன்கடைகளில் தகவல் பலகையில், முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்கள் குறித்து வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளில் விரல்ரேகை பதிவு சரியாக அமையவில்லை எனில் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைபேசியின் வழியாக ஒருமுறை கடவுச்சொல் பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் கைபேசி எண் இணைக்கப்பட்டிருந்தால் அந்த கைபேசி முகாமுக்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவு எளிமைப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

இதை தொடர்ந்து காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பச்சையப்பன் கிளை இடைநிலைப்பள்ளி மற்றும் பி.எம்.எஸ். உயர்நிலைப்பள்ளியில் முகாம் நடைபெறும் பகுதியையும், யாகசாலை மண்டப தெரு மற்றும் மலையாளத்தெரு போன்ற பகுதிகளில் விண்ணப்பங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டு வரும் நிகழ்வவையும் காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், வருவாய் ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story