சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும் - அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும் - அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Sep 2023 5:04 AM GMT (Updated: 22 Sep 2023 6:34 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்டு தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நீரை வைத்துக் கொண்டு குறுவை பாசனத்தை பழுது இல்லாமல் காப்பாற்றலாம் என கருதுகிறோம். காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும். தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு கர்நாடக அரசு ஆளாக நேரிடும். விநாடிக்கு 5,000 கன அடி நீரை 15 நாட்களுக்கு திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்திற்கான பங்கினை தர கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும். ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடகா உள்ளது. சட்டரீதியாக சென்று கொண்டிருக்கும்போது பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது.

பேச்சுவார்த்தை என்பது இனிமேல் இல்லை. பேச்சுவார்தைக்கு போனால் நமது கோரிக்கைகளை மழுங்கடித்து விடுவார்கள். இனிமேல் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை. தண்ணீர் திறந்து விட்டதும் தமிழகம் வந்துவிடாது. பிலிகுண்டுலு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story