நெய்தல் புத்தக திருவிழா நாளை தொடக்கம்:28 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு:கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல்


நெய்தல் புத்தக திருவிழா நாளை தொடக்கம்:28 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு:கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல்
x

கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த 28 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர்

புத்தக திருவிழா

கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டமாக பிரிந்து 30 ஆண்டுகள் ஆகிறது. அதனை அனுசரிக்கும் விதமாக "கடலூர் 30" என்ற தலைப்பில் "நெய்தல் புத்தக திருவிழா, " 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி வரை கடலூர் சில்வர் பீச்சில் நடைபெறுகிறது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளும், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பல்துறை திட்டங்கள் குறித்த 45 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தினசரி பிரபல பேச்சாளர்களின் பட்டிமன்றம், சொற்பொழிவுகள் நடக்கிறது.

28 ஆயிரம் மாணவர்கள்

தினசரி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் தினசரி 2,500 முதல் 3 ஆயிரம் மாணவர்கள் வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 28 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் வசதிக்காக 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மூலம் பள்ளிகளுக்கே சென்று மாணவர்களை ஏற்றி வரவும், விழா முடிந்ததும் மீண்டும் அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவின் நோக்கமே மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் திறனை ஊக்குவிப்பதே ஆகும்.

மேலும் இங்கு வரும் குழந்தைகளுக்காக அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், பல்வேறு விளையாட்டு போட்டிகளும், தமிழர் கலாசாரத்தை பறைசாற்றும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். புத்தக திருவிழாவுக்கு வருபவர்களின் வசதிக்காக மொபைல் டாய்லெட், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

500 போலீசார் பாதுகாப்பு

பொதுமக்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், யாரும் கடலுக்கு செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். புத்தக திருவிழாவையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உடனிருந்தார்.


Next Story