ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது - குடிநீர் பற்றாக்குறை தவிர்க்கப்படும்


ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது - குடிநீர் பற்றாக்குறை தவிர்க்கப்படும்
x

கோடைகாலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லை வந்தடைந்தது.

திருவள்ளூர்

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம். இத்திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெறவில்லை. பூண்டி ஏரியில் மதகு கிணறு அமைக்கும் பணிகள் மற்றும் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கிருஷ்ணா நதிநீர் பெறவில்லை. இந்தநிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனைக்கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசை கேட்டுக் கொண்டது.

அதன் பேரில் கடந்த பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி ஆகும். இதில் தற்போது 30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பத்திற்கு நேற்று காலை வந்தடைந்தது. வினாடிக்கு 20 கனஅடி விதம் நீர் வரத்து உள்ளது. இந்த நீர், அங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று(வியாழக்கிழமை) வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 26.39 அடியாக பதிவாகியது. 1.047 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story