குமரப்பட்டி புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி


குமரப்பட்டி புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி
x

குமரப்பட்டி புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா, குமரப்பட்டியில் திருச்சி மறைமாவட்டம், பாத்திமாநகர் பங்கிற்கு உட்பட்ட புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர் பவனி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ஆலயத்தில் பாத்திமாநகர் பங்குத்தந்தை மைக்கில்ஜோ தலைமையில் பல்வேறு பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்ட திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் புனிதரின் அன்னதானம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் வண்ண மின் விளக்குகள், மலர் மாலைகள் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட செபஸ்தியார் சொரூபம் பொருத்தப்பட்ட அலங்கார தேர் பவனி நடைபெற்றது. தேர் குமரப்பட்டியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அப்போது கிறிஸ்தவ மக்கள் தங்களது வீடுகளின் முன்பு நின்று மெழுகுவர்த்தி ஏந்தி செபஸ்தியாரை வழிபட்டனர். விழாவின் தொடர்ச்சியாக நேற்று இரவு 7 மணியளவில் ஆலயத்தில் கொடியிறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழாவில் பாத்திமாநகர், குமரப்பட்டி, மேலபச்சகுடி, கொட்டப்பட்டு, செவந்தியாணிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாத்திமாநகர் பங்கு தந்தை மைக்கில்ஜோ தலைமையில் பங்கு துறவற சபையினர், குமரப்பட்டி கிறிஸ்தவ மக்கள் செய்திருந்தனர்.


Next Story