நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை பெற்று தர வேண்டும்


நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை பெற்று தர வேண்டும்
x

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை பெற்று தர வேண்டும் என குளித்தலை எம்.எல்.ஏ. அமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.

கரூர்

குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியானது கரூர் மாவட்டத்திலேயே தகைசால் பள்ளியாக தேர்வு பெற்ற ஒரே பள்ளியாகும். இங்கு சுமார் ஆயிரத்து 587 மாணவிகள் பயின்று வருகின்றனர். கரூர் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான பள்ளி மாணவிகளை கொண்ட அரசு பள்ளியாகவும் விளங்குகிறது. இப்பள்ளியானது கல்வியில் 97 சதவீதம் தேர்ச்சியும், விளையாட்டுத்துறையில் மாவட்ட அளவில் கபாடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்தும் வருகின்றது. இவ்வாறு சிறந்து விளங்கும் பள்ளியின் மொத்த பரப்பளவு சுமார் 2.5 ஏக்கர் அளவிலும் சுமார் 30 சென்ட் அளவிலான விளையாட்டு மைதானத்தை கொண்டதாகவும் மிகவும் இடநெருக்கடியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. இப்பள்ளியின் அருகாமையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத்துறையின் அலுவலகம் மற்றும் பழுதடைந்த நிலையில் 100 ஆண்டுகள் பழமையான பயணியர் மாளிகையும் அதற்கு சொந்தமான நிலமும் உள்ளது. குளித்தலைக்கு மிக அருகில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் மேலக்குறப்பாளையம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதிய அலுவலகம் மற்றும் பயணியர் மாளிகையினை மாற்றி அமைக்கலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை இடத்தை இந்த பள்ளிக்கு பெற்று தந்து இடநெருக்கடியை குறைத்திட பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story