பால் வியாபாரியை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை


பால் வியாபாரியை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x

குளித்தலை அருகே பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கரூர்

பால் வியாபாரி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தெற்கு மாடுவிழுந்தான் பாறையை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 30). பால் வியாபாரியான இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த கதிரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், கதிரேசன் தந்தை பனையடியானை, அன்பழகன் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கதிரேசன், அன்பழகன் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி அதிகாலை அன்பழகன் பால்கறக்க சென்ற போது சுக்காம்பட்டியில் இருந்து சொட்டல் செல்லும் வழியில் கதிரேசன் (22), அவரது உறவினர்கள் ராஜேஷ் (26), குமார் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து அன்பழகனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் விசாரணை முடிந்து இவ்வழக்கில் நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பில் கதிரேசன், ராஜேஷ், குமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story