இளம்பெண் கழுத்தை நெறித்து கொலை; கணவன், மாமியார் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை


இளம்பெண் கழுத்தை நெறித்து கொலை; கணவன், மாமியார் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை
x

ராமேஸ்வரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன், மாமியார் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காந்திநகரை சேர்ந்தவர் சுப்பையா என்பவரின் மகன் சாந்தகுமார் (வயது32). இவர் ஆசாரி தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி அறந்தாங்கி சிலத்தூர் பகுதியை சேர்ந்த சாந்தி (27). கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதி சாந்தகுமாரின் தங்கை வனிதா (32) என்பவர் திருப்பாலைக்குடி பழங்கோட்டையில் கணவன் வீட்டில் இருந்து தாய் வீடான ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு சாந்தி மற்றும் சாந்தகுமார் குடும்பத்தினரிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தாய் மலையரசி (49), தங்கை வனிதா ஆகியோர் பிடித்து கொள்ள சாந்தகுமார் மனைவி சாந்தியின் கழுத்தை நெறித்து கொலை செய்தாராம்.

இதுகுறித்து சாந்தியின் அண்ணன் சங்கர்(37) அளித்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.சுபத்ரா மனைவியை கொலை செய்த சாந்தகுமார், அவரின் தாய் மலையரசி, தங்கை வனிதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.


Next Story