பேரம்பாக்கம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பேரம்பாக்கம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x

பேரம்பாக்கம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள ராமன் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னாவரம் கிராமத்தில் லிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பூசாரி நேற்று காலை வழக்கம் போல் திறக்க வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்களை அனைத்தும் சிதறி கிடந்தது.

மேலும் கோவில் அருகே உள்ள எல்லையம்மன் கோவிலின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது 2 கோவில்களிலும் அம்மன் கழுத்தில் இருந்த 2½ பவுன் தங்க நகையும், உண்டியல் பணம் ரூ.3 ஆயிரமும் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கோவில்களின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.


Next Story