திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் 3 ஆயிரத்து 337 வழக்குகள் முடித்து வைப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் 3 ஆயிரத்து 337 வழக்குகள் முடித்து வைப்பு
x

திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் நடந்தது. அதில் 3 ஆயிரத்து 337 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் அனைத்து அளித்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் லோக் அதாலத் நடைபெற்றது. இதை திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான செல்வ சுந்தரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்ரா தேவி, நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரமேஷ் பாபு, குடும்பநல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வித்யா, மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலாராஸ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி சாண்டில்யன், சார்பு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி, முதன்மை மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி ஸ்டார்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் முகழாம்பிகை, சத்திய நாராயணன், செல்வ அரசி, பவித்ரா மற்றும் மூத்த வக்கீல் சீனிவாசன், வங்கி அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் திருத்தணி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தேசிய மக்கள் கோர்ட்டு (லோக் அதாலத்) நடைபெற்றது. சார்பு நீதிபதி காயத்திரி தேவி தலைமையில், நீதித்துறை நடுவர் முத்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

கோர்ட்டில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்துகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியியல் வழக்குகளில் சமதானமாக செல்லக்கூடிய வழக்குகள், வங்கி வாராக்கடன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்வு எட்டபடமால் இருந்த 161 வழக்குகளுக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. பின்னர் இருதரப்பினரிடையே பேசி ரூ.4 கோடியே 89 லட்சத்து 35 ஆயிரத்து 297 லோக் அதாலத் மூலம் சமரச தீர்வு காணப்பட்டது. அதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு நீதிபதிகள் காயத்ரி தேவி, முத்துராஜ் ஆகியோர் ஆணைகளை வழங்கினர்.

பொன்னேரியில் உள்ள கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வரும் நிலையில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தேசிய லோக் அதாலத் முதன்மை சார்பு கோர்ட்டில் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கர் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் குற்றவியல் நீதிபதிகள் மோகனப்பிரியா, அய்யப்பன், முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிவில் வழக்குகள் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் நில ஆர்ஜித வழக்குகள் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட 762 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு லோக் அதாலத்தில் சமரசமாக முடிக்கப்பட்டது.

இதில் ரூ.11 கோடியே 57 லட்தத்து 215 வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் பொன்னேரி பார் அசோசியன் தலைவரும் அரசு வக்கீலுமான தேவேந்திரன் கூடுதல் சார்பு கோர்ட்டு வக்கீல் பல்லவன், அரசு வக்கீல் அம்ரத்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 86 வழக்குகள் சமரசத் தீர்வுக்கு எடுக்கப்பட்டு மொத்தம் 3 ஆயிரத்து 337 வழக்குகள் முடிக்கப்பட்டது. ரூ.47 கோடியே 54 லட்சத்து 81 ஆயிரத்து 366 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.


Next Story