மோட்டார் சைக்கிளில் லாரி மோதி விபத்து - பஸ் கண்டக்டர் பலி


மோட்டார் சைக்கிளில் லாரி மோதி விபத்து - பஸ் கண்டக்டர் பலி
x

தொரப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ஹரி (வயது 43). அரசு பஸ் கண்டக்டர். ஜமுனாமரத்தூர்- வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்சில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று பணி முடிந்து பிற்பகல் 1 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார் .

தொரப்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அரிசி மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் நிலைதடுமாறிய ஹரி லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த உடன் லாரியை டிரைவர் அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இவ்விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து,டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story