வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் சிறைபிடிப்பு: வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை


வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் சிறைபிடிப்பு: வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Oct 2023 7:00 PM GMT (Updated: 21 Oct 2023 11:44 AM GMT)

வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்களை சிறைபிடித்து தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தர்மபுரி

ஆயுதபூஜை தொடர் விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் தர்மபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வெளி மாநில 2 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டு தர்மபுரி வட்டார போக்கவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பஸ்களுக்கு உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது.

அரசுக்கு வருவாய்

இந்த வாகன சோதனையில் அரசுக்கு மொத்தம் ரூ.1,47,500 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story