மதுரை: சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல் - மூதாட்டி உட்பட 2 பேர் பலி


மதுரை: சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல் - மூதாட்டி உட்பட 2 பேர் பலி
x

வாடிப்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வாடிப்பட்டி,

நெல்லை பழைய பேட்டையைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை(வயது80) கட்டிட காண்டாக்டர். இவரது மனைவி செல்லம்மாள்(74). இவர்களது மகள் பொன்மலர்(40) அதே ஊரை சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பொன்மலருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கோவைக்கு அவரது குடும்பத்தார் ஆம்புலன்ஸ் வேனில் அழைத்துச் சென்றனர்.

அந்த வேனின் பின்னால் செல்லம்மாள் காரில் சென்றார். அந்த காரினை நெல்லையை சேர்ந்த கார் டிரைவர் ராஜா(38) ஓட்டி வந்தார். அந்த கார் இன்று மாலை 5.45 மணிக்கு வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பிரிவு என்ற இடத்தில் மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் கார் மோதியது.

இதில் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே செல்லம்மாள், ராஜா இருவரும் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் இடுபாடுகளில் சிக்கி இருந்த செல்லம்மாள், ராஜா இருவரின் உடலை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story