மத்திய அரசின் 'மேகதூத் விருது' பெற்ற மதுரை தபால்துறை உதவி இயக்குனர்


மத்திய அரசின் மேகதூத் விருது பெற்ற மதுரை தபால்துறை உதவி இயக்குனர்
x

சிறப்பாக பணியாற்றியதற்காக மதுரை தபால்துறை உதவி இயக்குனருக்கு முன்மாதிரி பணியாளர் விருது வழங்கப்பட்டது.

மதுரை:

தபால்துறை சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறப்பான சேவையாற்றிய பணியாளர்களுக்கு மத்திய தபால்துறை மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் மேகதூத் விருது வழங்கப்படுகிறது. இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான மேகதூத் விருதை மதுரையில் உள்ள தென்மண்டல தபால்துறைத்தலைவர் அலுவலகத்தின் உதவி இயக்குராக பணியாற்றி வந்த கே.கலைவாணி பெற்றுள்ளார்.

இவர், தபால் வங்கி சேமிப்பு கணக்கு நடைமுறையை தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப எளிதாக மாற்றும் திட்டத்தை திறமையாக செயல்படுத்தியதற்காகவும், தபால்துறை வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான கண்காணிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.

அத்துடன், தபால்துறை நடவடிக்கைகளை எளிமையாக்கும் பல திட்டங்களை செயல்படுத்தியதற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், தபால்துறையில் பெண் பணியாளர்களுக்கான முன்மாதிரி என்பதை இவர் நிரூபித்துள்ளதாகவும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விருதை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இவர் பதக்கம், பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

கடந்த 2002-ம் ஆண்டு தபால்துறையில் தபால் உதவியாளராக பணியில் சேர்ந்த இவர், 2018-ம் ஆண்டு துறைத்தேர்வு எழுதி குரூப்-பி அலுவலராக பதவி உயர்வு பெற்று தென்மண்டல தபால்துறைத்தலைவர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தனது சொந்த ஊரான திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தென்மண்டல தபால்துறைத்தலைவர், இயக்குனர், மற்றும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த தபால்துறை அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story