மகாளய அமாவாசை; சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி...!


மகாளய அமாவாசை; சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி...!
x
தினத்தந்தி 11 Oct 2023 5:30 AM GMT (Updated: 11 Oct 2023 6:00 AM GMT)

மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு அகஸ்தியர் உட்பட 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கமும் இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக லிங்கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் சதுரகிரிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதன்படி வருகிற 14-ந்தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு நாளை (12-ந்தேதி) முதல் வருகிற 15-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்து உள்ளது. மகாளய அமாவாசைக்கு இம்முறை சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி மாவட்ட நிர்வாகமும், வனத் துறையினரும் அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். மேலும் மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கூடுதலாக சதுரகிரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


Next Story