உற்பத்தி குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு


உற்பத்தி குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு
x

உற்பத்தி குறைவால் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், கவுண்டன்புதூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், சோளக்காளிபாளையம், நாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோள கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் மக்காச்சோள கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர்.

பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் மக்காச்சோள கதிர்களை சந்தை பகுதிகளுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும் வியாபாரிகள் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதை வாங்கிய பொதுமக்கள் சோளக்கதிரை உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடுகின்றனர். பல இடங்களில் மக்காச்சோளத்தை வாங்கி சோளப்பொறி தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளத்தை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் வந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மக்காச்சோள மாவு தயாரிக்கும் மில்களுக்கும், மாடு, கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும், அதேபோல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.24 வரை விற்பனையானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story