செங்கல்பட்டு மாவட்டத்தில் 2½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி


செங்கல்பட்டு மாவட்டத்தில் 2½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறுகுறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர்.

எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.

மேலும் இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின்மூலம் பரவும் தன்மைக்கொண்டது. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் போன்றவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 54 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் மூன்றாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி 1.3.2023 முதல் 21.3.2023 முடிய 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் போன்றவற்றுக்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டு கொள்ளுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story