மெட்ரோ பணி: அடையார் இந்திரா நகர் 2-வது பிரதான சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்


மெட்ரோ பணி: அடையார் இந்திரா நகர் 2-வது பிரதான சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்
x

கோப்புப்படம் 

ஓஎம்ஆர்-லிருந்து 2-வது அவென்யூ வழியாக எல்பி சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் முதற்கட்ட பணிக்காக அடையார் இந்திரா நகர் 2-வது பிரதான சாலையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் அடையார் இந்திரா நகரில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு இந்திரா நகரில், பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் வருகின்ற 18.02.2024 முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

ஓஎம்ஆர் நோக்கி செல்லும் வாகனங்கள்:

எம்ஜி சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2-வது அவென்யூ வழியாக ஓஎம்ஆர் நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 2வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, 21-வது குறுக்குத் தெரு, இந்திரா நகர் 3-வது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். கலாக்ஷேத்ராவிலிருந்து ஓஎம்ஆர் நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும். கேபிஎன்-லிருந்து ஓஎம்ஆர் நோக்கி வரும் வாகனங்களும் வழக்கம் போல் செல்லும்.

எல்பி ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்:

ஓஎம்ஆர்-லிருந்து 2-வது அவென்யூ வழியாக எல்பி சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்கு மாறாக அவ்வாகனங்கள் 2-வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் 1-வது பிரதான சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். கலாக்ஷேத்ராவிலிருந்து இந்திரா நகர் 3-வது அவென்யூ வழியாக எல்பி ரோடு நோக்கி வரும் வாகனங்கள், இந்திரா நகர் 4-வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் 2-வது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

கேபிஎன் நோக்கி செல்லும் வாகனங்கள்:

ஓஎம்ஆர் மற்றும் கலாக்ஷேத்ராவிலிருந்து கேபிஎன் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story