அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கொழுப்பு கட்டி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கொழுப்பு கட்டி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

அமைச்சர் செந்தில் பாலாஜி நலமாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து கோர்ட்டில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் கோர்ட்டு காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதயம் சார்ந்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பித்தப்பையில் கல் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "செந்தில் பாலாஜி நலமாக இருக்கிறார். நேற்று அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக முதலில் கூறினார்கள். அதற்கான சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் கல் இல்லை என்றும் சிறு சிறு கொழுப்பு கட்டிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் எந்த பாதிப்பும் இல்லை.

அவரது உடல் சோர்வாக இருப்பதன் காரணமாக, இன்றும் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பரிசோதனைகள் முடிவில் அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிப்பது என்பது குறித்து மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள்" என்று கூறினார்.


Next Story