மானாமதுரையில் பரிதாபம்: கணவர் கண் எதிரில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
மானாமதுரையில் கணவர் கண் எதிரில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.
மானாமதுரை,
மானாமதுரையில் கணவர் கண் எதிரில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.
பஸ்சில் இருந்து தவறி விழுந்தார்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே விஜயன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் போதுராஜா. இவரது மனைவி சுமதி (வயது 42). இவர்கள் இருவரும் மானாமதுரை அருகே கட்டனூர் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். அங்கு திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு ஊர் திரும்புவதற்காக மானாமதுரை பஸ் நிலையத்திற்கு நேற்று வந்தனர். அங்கிருந்து விஜயன்குடி செல்வதற்காக போதுராஜா, சுமதி ஆகிய இருவரும் தனியார் பஸ்சில் முன்பக்கம் வழியாக ஏறினர். பஸ் நிலையத்தை விட்டு தனியார் பஸ் வெளியே வந்து இடதுபுறமாக திரும்பியது. அப்போது பஸ்சுக்குள் நின்றிருந்த சுமதி எதிர்பாராமல் தவறி ரோட்டில் கீேழ விழுந்தார்.
சாவு
கண் இமைக்கும் நேரத்தில் அதே பஸ்சின் பின்சக்கரம் சுமதி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை நேரில் பார்த்த அவரது கணவர் போதுராஜா கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண் எதிரில் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.