பெரும்பாக்கத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை - கோர்ட்டில் 2 பேர் சரண்


பெரும்பாக்கத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை - கோர்ட்டில் 2 பேர் சரண்
x

டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்ற முருகன் (வயது 37). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி சுகந்தி (32).

சுந்தரமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து உதைத்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவர் மீது போலீஸ் நிலையத்தில் சுகந்தி புகார் செய்தார். இதனால் சுந்தரமூர்த்தி, மனைவியை விட்டு பிரிந்து அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சுந்தரமூர்த்தி, தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு நேதாஜி நகர்-எழில் நகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென சுந்தரமூர்த்தியை வழிமறித்து தங்களிடம் இருந்த கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தி, அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் செம்மஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ரியாசூதீன், பெரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான சுந்தரமூர்த்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த விஜயபாபு, படை சந்தோஷ் ஆகியோர்தான் சுந்தரமூர்த்தியை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் விஜயபாபு, படை சந்தோஷ் இருவரும் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான் சுந்தரமூர்த்தி கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story