தாயை உயிரோடு கழிவுநீர் தொட்டியில் புதைத்து கொன்ற கொடூரம்


தாயை உயிரோடு கழிவுநீர் தொட்டியில்   புதைத்து கொன்ற கொடூரம்
x

மது குடிக்க பணம் தராததால் தாயை அடித்து உயிருடன் கழிவுநீர் தொட்டியில் போட்டு புதைத்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் மனைவி அசோதை (வயது 70). கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் (40). இவருக்கு செல்வி என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ராஜகோபால் இறந்துவிட்டதால் அசோதை மகன் சக்திவேலுடன் வசித்து வந்தார். சக்திவேலுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சக்திவேல் சரிவர கூலி வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கணவரிடம் கோபித்துக் கொண்டு செல்வி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பெங்களூருக்கு சென்று வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சக்திவேல் தனது தாயிடம் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

தாயுடன் தகராறு

இதனால் அசோதை தினந்தோறும் இரவில் அருகில் உள்ள மண்ணம்மாள் என்பவரின் வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு அவர் மண்ணம்மாள் வீட்டுக்கு சென்றார். இதையறிந்த சக்திவேல் அங்கு சென்று தாயுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்றார்.

இந்த நிலையில் நேற்று அக்கம் பக்கத்தினர் அசோதையை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. சக்திவேல் மட்டும் வீட்டில் இருந்தார். இதையடுத்து அவரிடம் அவர்கள் அசோதை குறித்து கேட்டனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கழிவுநீர் தொட்டியில்...

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு மதுகுடிக்க சக்திவேல் அசோதையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் தனது தாய் என்றும் பாராமல் அசோதையின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

வெகு நேரம் ஆகியும் எந்த அசைவும் தெரியாததால், அவர் இறந்துவிட்டார் என நினைத்து உயிரோடு இருந்த அவரை வீட்டின் பின்பக்கம் இருந்த கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடி விட்டார். இதில் அசோதை இறந்தது தெரியவந்தது.

கைது

இதையடுத்து அசோதையின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சக்திவேலை கைது செய்து மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகன் அடித்து உயிருடன் கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story