இரு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்


இரு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
x

பழனியில் இரு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்


பழனியில், இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாவட்டம்,பழனி பாண்டியன் நகரை சேர்ந்தவர் பர்கான் (வயது 45). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது சென்னையில் சுகாதாரத் துறை அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சபினா (35). இவர்களுக்கு சனா (13), யமீனா (11) என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். சபீனா பழனி மார்க்கெட் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை சபினாவின் தாயார் அவரை தொலைபேசியில் அழைத்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். சபீனாவின் வீடு பூட்டியே இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மகள்களை கொன்று தாய் தற்கொலை

பின்னர் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு சபீனா தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளார்.படுக்கை அறையில் சென்று பார்த்த போது அவரது மகள்கள் இருவரும் பிணமாக இருந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, சபீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பர்கான் பழனிக்கு வந்துவிட்டு சென்னைக்கு சென்றதும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story