மகளை கொன்ற மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மாமியார் - அரியலூரில் பரபரப்பு


மகளை கொன்ற மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மாமியார் - அரியலூரில் பரபரப்பு
x

மகளை கொன்ற மருமகனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வடுகர்பாளையம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மனைவி சரோஜா (வயது 53). இவர்களது மகள் பிரியா என்கிற பராசக்தி (19). இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி தமிழரசனுக்கு (26) தனது மகள் பிரியாவை சரோஜா திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் திருமணமான 3 மாதங்களில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழரசன் தனது மனைவி பிரியாவை அடித்துக்கொன்றார். இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் சரோஜா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து 3 மாதங்களிலேயே தமிழரசன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தன் மகளை கொன்ற தமிழரசனை பழிவாங்குவதற்காக சரோஜா 3 மாதங்களாக காத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து கொண்டு கையில் அரிவாளுடன் சரோஜா, தமிழரசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வெளியே கட்டிலில் படுத்திருந்த தமிழரசனை சரமாரியாக சரோஜா அரிவாளால் வெட்டினார். இதில் அவரது நடு மண்டை மற்றும் வலது கையில் வெட்டு விழுந்தது. ேமலும் இடது கை விரல்கள் துண்டிக்கப்பட்டன.

இதையடுத்து, தமிழரசனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த அவரது தாயார் விமலா (45) சரோஜாவை தடுக்க முயன்றார். இதனால் அவரையும் சரோஜா அரிவாளால் வெட்டினார். பின்னர் தமிழரசன், விமலா ஆகியோரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்தனர். பின்னர், அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தமிழரசன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையில் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரோஜாவை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

மனைவியை கொன்ற பால் வியாபாரியை மாமியார் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து மருமகனை வெட்டியது ஏன்? - கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

நான் பாராட்டி, சீராட்டி வளர்த்த எனது மகளை கொலை செய்த தமிழரசன் சிறையில் இருந்து 3 மாதங்களில் வெளியே வந்து விட்டார். எனவே எனது மகளின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி தமிழரசனை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் குறிகேட்டேன். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொட்டை அடித்துக்கொண்டேன். மேலும், சேலையில் சென்று வெட்டினால் யாரேனும் என்னை அடையாளம் கண்டு பிடிக்கக்கூடும் என்பதால் எனது மகனின் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்றேன்.

தமிழரசன் வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கியது யார்? என்பது எனக்கு தெரியவில்லை. இதனால் கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தவரிடம் போர்வையை இழுத்து தமிழரசன் தானா? என கேட்டேன். அதற்கு அவர் ஆமாம் என்று கூறி, நீங்க யாரு? என கேட்டார். இந்த வார்த்தையை கேட்டவுடன், நான் தான்டா உன் மாமியார் எனக்கூறி ஆவேசமாக தமிழரசனை சரமாரியாக வெட்டினேன். தலை, கைகளில் சரமாரியாக வெட்டியதால் தமிழரசன் பிழைக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினர்.


Next Story