கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி


கும்மிடிப்பூண்டி அருகே  லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி
x

கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சப்-இன்ஸபெக்டர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்

மோட்டார் சைக்கிள் விபத்து

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார். இவரது மகன் கார்த்திக் (வயது 22). இவர் தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர் ஹரிஷ் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள நீர்விழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டிச் சென்றார்.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது, அதே திசையில் ஆந்திரா நோக்கிச்சென்ற லாரி ஒன்று திடீரென பிரேக் போட்டதால் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதியது.

பரிதாப பலி

இதில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசேதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த நண்பர் ஹரிஷ் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story