காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி


காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
x

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 50). இவர் காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியை அடுத்த நத்தப்பேட்டை பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் காஞ்சீபுரம் அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியை பழுது பார்க்க தனது கடையில் பணிபுரியும் சதீஷ் (17) என்பவரை அழைத்து கொண்டு பழுது நீக்கி விட்டு மீண்டும் காஞ்சீபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து குருவிமலையிலுள்ள தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த ஏ.சி. மெக்கானிக் மூர்த்தி என்கிற யோக மூர்த்தி (20) என்பவரது மோட்டார் சைக்கிளும் ஆனந்தன் வந்த மோட்டார் சைக்கிளும் ஓரிக்கை பாலாறு மேம்பாலத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆனந்தன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விபத்தில் உயிரிழந்த ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மூர்த்தி மற்றும் சதீஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனந்தனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ் படுகாயம் அடைந்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story