'எனது ஆழ்ந்த அனுதாபங்கள்' - பிரதமரின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


எனது ஆழ்ந்த அனுதாபங்கள் - பிரதமரின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி உயிரிழ்நதார். அவருக்கு வயது 99. தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றுள்ளார்.

ஏற்கனவே திட்டமிட்டு இருந்த நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய தாயார் ஹீராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம்.

தாயின் இழப்பை யாராலும் தாங்க முடியாது. உங்கள் இழப்புக்காக நான் மிகவும் வருந்துகிறேன். என்னுடைய வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் இருந்த நினைவுகளில் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story