'தொண்டர்களை வாழவைக்கும் அன்னையாகதான் இனி என் வாழ்வு' - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


தொண்டர்களை வாழவைக்கும் அன்னையாகதான் இனி என் வாழ்வு - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
x

தேமுதிக அலுவலகத்தில் மறைந்த விஜயகாந்தின் திருவுருவ படத்தை பிரேமலதா நேற்று திறந்து வைத்தார்.

சென்னை,

தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மறைந்த விஜயகாந்தின் திருவுருவ படத்தை அவரின் மனைவியும், தேமுதிக பொது செயலாளருமான பிரேமலதா நேற்று மாலை 4 மணிக்கு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், 'கேப்டனின் நினைவிடம் இந்த யுகம், இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை கோயிலாகத்தான் இருக்கும்.

பலரும், மறைந்த விஜயகாந்தின் பெயரில் டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டீர்கள். உங்களது விருப்பப்படி, டிரஸ்டை நான் அவர் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன். வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்க வேலைகள் அன்றே ஆரம்பித்துவிட்டது

தொண்டர்களை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என் வாழ்வு இருக்கும். இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இதுதான் நம் கோவில். இன்று போடும் அன்னதானம் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை தொடரும்' என்று தெரிவித்தார்.


Next Story