எடப்பாடி அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவி மர்ம சாவு உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு


எடப்பாடி அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவி மர்ம சாவு உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Jun 2023 8:06 PM GMT (Updated: 13 Jun 2023 12:08 PM GMT)

எடப்பாடி அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவி திடீரென இறந்தார். அவர் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில், மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

எடப்பாடி

கல்லூரி பேராசிரியர் மனைவி

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் கிராமம் செம்மண் காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 29). இவர் சங்ககிரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கார்த்திக் ராஜாவிற்கும், கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் சுரேகா என்ற சுந்தரேஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. சமீபத்தில் அந்த குழந்தை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தை இறந்தது முதல் சுந்தரேஸ்வரிக்கும், அவரது கணவர் கார்த்திக் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

திடீர் சாவு

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சுந்தரேஸ்வரி திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை மீட்ட குடும்பத்தினர், எடப்பாடி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சுந்தரேஸ்வரி சிகிச்சை பலனின்றி திடீரென இறந்தார்.

இதைத்தொடர்ந்து சுந்தரேஸ்வரியின் பெற்றோர், பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் தங்களது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுந்தரேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் சாலைமறியல்

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடைபெறவில்லை என சுந்தரேஸ்வரியின் உறவினர்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து அவரது உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று மாலை எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் சுந்தரேஸ்வரியின் உறவினர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், சுந்தரேஸ்வரியின் உடல் சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சுந்தரேஸ்வரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், அவரது இறப்பு குறித்து சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகியும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story