1,097 வழக்குகளில் ரூ.11.58 கோடிக்கு சமரச தீர்வு


1,097 வழக்குகளில் ரூ.11.58 கோடிக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 11 Feb 2023 6:45 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,097 வழக்குகளில் ரூ.11.58 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,097 வழக்குகளில் ரூ.11.58 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டன.

தேசிய மக்கள் நீதிமன்றம்

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்ற வளாகங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தலைமை தாங்கினார்.

இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், சிறப்பு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய மாவட்ட நீதிபதி அமுதா, முதன்மை சார்பு நீதிபதி லீலா, சிறப்பு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய சார்பு நீதிபதி அஷ்பக் அகமது, கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கதலைவர் கோவிந்தராஜூலு, சங்க செயலாளர் ராஜா விஸ்வநாத் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1,097 வழக்குகளுக்கு சமரச தீர்வு

இதில், நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை, வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டு 5,382 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில், 1,097 வழக்குகளில் ரூ.11 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 485 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டன.


Next Story