மயிலாடுதுறையில் பிரச்சாரத்தை தொடங்கிய நா.த.க. வேட்பாளர் காளியம்மாள்


மயிலாடுதுறையில் பிரச்சாரத்தை தொடங்கிய நா.த.க. வேட்பாளர் காளியம்மாள்
x
தினத்தந்தி 1 March 2024 8:55 AM GMT (Updated: 1 March 2024 11:10 AM GMT)

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள், மயிலாடுதுறை தொகுதியில் முதல் வேட்பாளராக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

மயிலாடுதுறை,

நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்யாத நிலையில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் முதல் வேட்பாளராக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவுத்தூணுக்கு மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாஸ் தலைமையில் மரியாதை செய்து வீரவணக்கம் செய்து வேட்பாளர் காளியம்மாள் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து கல்லூரி மாணவிகள், பொதுமக்களிடம் வாக்குசேரித்த காளியம்மாள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் முன்னே செல்ல திறந்த வாகனத்தில் மயிலாடுதுறை நகரில் வாக்கு சேகரித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் காளியம்மாள் கூறுகையில், "விவசாயமும் கடலும் சேர்ந்த இந்த பகுதியில் ஆட்சிகள் மாறினாலும் மக்களின் வாழ்வியல் அப்படியே உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம், மருத்துவத்தில் பின்தங்கியுள்ளது.

60 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் சாமானிய பெண்ணாக போட்டியிடுகிறேன். மயிலாடுதுறையில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை தொடங்கினாலே மாவட்டத்தில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம். நான் வெற்றி பெற்றால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்" என்றார்.


Next Story