விளாத்திகுளம் அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 42 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


விளாத்திகுளம் அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 42 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 11:22 AM GMT)

விளாத்திகுளம் அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 42 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு கந்தசுப்பிரமணியன் மற்றும் போலீசார் குளத்தூரில் இருந்து சூரங்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் விளாத்திகுளம் விலக்கு பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் தலா 40 கிலோ எடை கொண்ட 42 மூட்டைகளில் மொத்தம் சுமார் 1680 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசியை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி கொடுநல்லான்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விளாத்திகுளம் பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாட்டுப்பண்ணையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.


Next Story