நெல்லை: பட்டப்பகலில் கட்டிடத் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை


நெல்லை: பட்டப்பகலில் கட்டிடத் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 6 Aug 2022 11:58 AM GMT (Updated: 6 Aug 2022 11:58 AM GMT)

நெல்லையில் பட்டப்பகலில் கட்டிடத் தொழிலாளி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்

நெல்லை,

நெல்லை தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் பேச்சிராஜா(வயது 26). ஐ.டி.ஐ. படித்த இவர் கட்டிடதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும்,3 மாதமே ஆன கைக்குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் இவர் இன்று காலை 9.30 மணி அளவில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபரும் உடன் சென்றார்.

இருவரும் சிறிது தூரத்தில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபரை எச்சரித்து விரட்டிய கும்பல் பேச்சிராஜாவை அரிவாளால் வெட்ட பாய்ந்தனர்.

உடனே பேச்சிராஜா அங்கிருந்து தப்பி ஓடினார். எனினும் அந்த கும்பல் அவரை ஓடி, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் கொலை செய்யப்பட்ட பேச்சிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சிராஜாவை கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேச்சிராஜா மீது கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த மாசான மூர்த்தி என்பவர் கொலை வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த முன் விரோதத்தில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அந்த பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story