நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானையை வன அலுவலர் ஆய்வு


நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானையை வன அலுவலர் ஆய்வு
x

யானையை நல்லமுறையில் பராமரிக்கும்படி பாகன்களுக்கு வன அலுவலர் ஆலோசனைகள் வழங்கிச்சென்றார்.

நெல்லை:

நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி என்ற பெயரில் பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு 52 வயது ஆகிறது. இந்த யானை உடல் எடை அதிகரிப்பால் நடை பயிற்சி அளிக்கப்பட்டு உடல் எடை குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் யானை பாதங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பக்தர்கள் சார்பில் காலணிகளும் தயாரித்து வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நெல்லை உதவி வன பாதுகாவலர் ஹேமலதா நேற்று மாலை நெல்லையப்பர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து காந்திமதி யானையை நேரில் பார்வையிட்டார். பின்னர் யானைக்கு வழங்கப்படும் உணவு வகைகள், தற்போது பக்தர்களால் வழங்கப்பட்ட காலணி ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் கோவில் வளாகத்தில் யானை குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நீச்சல்குளத்தையும் அவர் பார்வையிட்டார். அதை தொடர்ந்து யானையை நல்லமுறையில் பராமரிக்கும்படி பாகன்களுக்கு ஆலோசனைகள் வழங்கிச்சென்றார்.


Next Story