ராயபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணி - சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல்


ராயபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணி - சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல்
x

பூங்கா அமைக்கும் பணியானது ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

"சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ராயபுரம் மண்டலம், 53-வது வார்டுக்கு உட்பட்ட பேசின் பாலம் சாலையில் உள்ள மின்ட் மேம்பாலத்தின் கீழ் 13,708 ச.மீ. பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பூங்காவில் நடைபாதை, முதியோர்கள் பயன்படுத்தக்கூடிய பகுதி, மூத்த குடிமக்களுக்கான திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், திறந்தவெளி யோகா பகுதி, சிலைகள் மற்றும் சுவரோவியங்கள், மழைநீர் சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய கட்டமைப்பு, இருக்கை வசதிகள், மின்வசதி, கழிப்பறை, இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்தப் பகுதி வாழ் மக்கள் வசதிக்காகவும், மறைந்த மூத்தோர்களின் நினைவாகவும் பிரத்யேகமாக மரக்கன்றுகள் நடுவதற்கான பகுதியும் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் சுமார் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு மாநகராட்சி மூலம் இலவசமாக பராமரிக்கப்படும். இந்தப் பூங்கா பணியானது ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story