விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி. பற்றி பேச தடை விதிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்


விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி. பற்றி பேச தடை விதிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
x

விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ.ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி. நிலப்பறிப்பு குறித்து விவசாயிகள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் தடை விதித்திருப்பத்துக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ.ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி. நிலப்பறிப்பு குறித்து விவசாயிகள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தின் நோக்கமே விவசாயிகளின் குறைகளை தீர்ப்பது தான். கடலூர் மாவட்ட விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்சினையே என்.எல்.சி. நிலப்பறிப்புதான். அடிப்படை சிக்கலான என்.எல்.சி. நிலப்பறிப்பு பற்றி பேசக்கூடாது என்றால், எதற்காக விவசாயி குறை தீர்க்கும் கூட்டம்?

என்.எல்.சி. நிலங்களை பறிக்கவில்லை என்றால், என்.எல்.சி.யால் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால், அது குறித்து விவாதிக்கவே கடலூர் மாவட்ட நிர்வாகமும், கலெக்டரும் அஞ்சுவது ஏன்? மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் ஏன்? என்.எல்.சி. நிறுவனமும், அதன் செயல்பாடுகளும் கடலூர் மாவட்ட மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரானது. அடக்குமுறைகள், அர்த்தமற்ற தடைகள் ஆகியவற்றின் மூலம் என்.எல்.சி.க்கு எதிரான உணர்வுகளை தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் அனைத்து அடக்குமுறைகளையும் முறியடித்து மக்கள் சக்தி வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story