கபிலர்மலை அருகே வாகனம் மோதி வடமாநில தொழிலாளி பலி


கபிலர்மலை அருகே வாகனம் மோதி வடமாநில தொழிலாளி பலி
x
தினத்தந்தி 28 Jun 2023 7:00 PM GMT (Updated: 29 Jun 2023 11:55 AM GMT)

கபிலர்மலை அருகே வாகனம் மோதி வடமாநில தொழிலாளி பலியானார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பீகார் மாநிலம் பிமல்பூர் பகுதியை சேர்ந்தவர் முஷாபார் சஹானி. இவருடைய மகன்கள் பகதூர்குமார் (வயது 24), அருண்குமார் (19). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே இருக்கூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பகதூர்குமார், அருண்குமார் தங்களது நண்பர்களுடன் கபிலர்மலையில் உள்ள வாரச்சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் தங்கியிருக்கும் அட்டை தயாரிக்கும் கம்பெனிக்கு செல்ல புறப்பட்டனர்.

அப்போது பகதூர்குமார், அவருடைய தம்பி அருண்குமாரை அழைத்தபோது அவர் நீங்கள் கம்பெனிக்கு செல்லுங்கள் நான் பீகார் செல்வதால் தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வருகிறேன் என்று கூறினார். அதனையடுத்து பகதூர்குமார் தான் வேலை பார்க்கும் தனியார் அட்டை கம்பெனிக்கு சென்று விட்டார். அருண்குமார் இரவு கபிலர்மலையில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையோரமாக நடந்து சென்றபோது வேகமாக வந்த வாகனம் ஒன்று அருண்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. அப்போது அந்த வழியாக வந்த அதே கம்பெனியில் வேலை செய்யும் சரவணன் என்பவர் அருண்குமார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து கிடப்பதை பார்த்தார்.

இதையடுத்து அவரை மீட்டு ஆம்புலன்சில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..


Next Story