காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சி-பேரணி


காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சி-பேரணி
x

காஞ்சீபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பேரணியை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக முதல் வாரத்தில் தாய்ப்பால் புகட்டுதல் மற்றும் இணை உணவு அளித்தல், இரண்டாவது வாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல், ஊட்டச்சத்து மற்றும் முன்பருவக்கல்வி, யோகா, உள்ளூர் உணவு போன்ற ஆயுஷ் நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை பின்பற்றுதல், 3-வது வாரத்தில் என் மனம், என் நாடு மற்றும் பழங்குடியினைரை மையமாகக் கொண்டு ஊட்டச்சத்து உணர்திறன் மற்றும் நான்காவது வாரத்தில் இரத்தசோகை பரிசோதனை, சிகிச்சை பேச்சு, ஒட்டுமொத்த ஊட்டச்சத்து (பொது உணர்திறன்) நடவடிக்கைகள் மற்றும் சமுதாய தோட்டங்கள் அமைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் மற்ற துறைகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு கண்காட்சி-பேரணி

ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார். பின்பு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முதல் மேட்டுத்தெரு வரை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார திட்ட உதவியாளர்கள் மற்றும் பயனாளிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story