அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உத்தரவு..!


அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உத்தரவு..!
x

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர், "அதிமுக பொதுச்செயலாளர் என தன்னை ஐகோர்ட்டு, தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

எனவே அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், சுப்ரீம் கோர்ட்டு வரை நான்கு முறை இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கட்சியினுடைய சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்தி வருவது தவறு என்றும் அது சட்டவிரோதமானது என்றும் வாதிட்டார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த மனுவுக்கு பதில் அளிக்க குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு அக்டோபர் 6-ம்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.


Next Story