விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி


விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 13 Jun 2023 8:48 PM GMT (Updated: 13 Jun 2023 8:54 PM GMT)

விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றநிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சென்னை,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது.

இந்த சூழலில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு அடைந்தது. காலை 8 மணி முதல், சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. இதேபோல அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டிலும் சோதனை நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்தனர்.

இதனிடையே அமைச்சரின் இல்லத்திற்கு வழக்கறிஞர்கள், திமுக தொண்டர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story