திருத்தணி முருகன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு


திருத்தணி முருகன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு
x

திருத்தணி முருகன் கோவிலில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோவில் இட ஆக்கிரமிப்புகளை தடுக்க வேலி அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர்

அதிகாரிகள் ஆய்வு

திருத்தணியில் முருகனின் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் மலைமேல் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று முருகன் மலைக்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலம் அளவீடு செய்வது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. தீபா, தாசில்தார் மதன், முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மலைப்பகுதியைச் சுற்றி வேலிகள்

ஆய்வு குறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது:-

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு சொந்தமாக 144 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. முருகன் கோவில் மாற்றுப்பாதை திட்டத்திற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. நில நிர்வாக ஆணையர் உத்தரவின்படி திருத்தணி முருகன் மலைக்கோவில் இடத்தினை நில அளவீடு செய்து முருகன் கோவில் அமைந்துள்ள இடத்தினை ஒரு சர்வே எண்ணிலும், மற்ற மலைப்பகுதி மற்றொரு சர்வே எண்ணிலும் பதிவு செய்யப்பட உள்ளது. அளவீடு பணிகள் முடிந்ததும் மலைப்பகுதி சுற்றி உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்புக்கள் ஏற்படுத்தாதவாறு மலைப்பகுதியைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இன்று ஆய்வு நடைபெற்றுள்ளது. நில அளவீடு செய்யும் பணிகள் அதிநவீன கருவிகளைக் கொண்டு விரைவில் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.


Next Story