மின்னல் தாக்கி மூதாட்டி பலி


மின்னல் தாக்கி மூதாட்டி பலி
x

மின்னல் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார்.

திருச்சி

முசிறி:

மின்னல் தாக்கி சாவு

முசிறி அருகே திண்ணக்கோணம் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியக்காள்(வயது 60). விவசாய கூலி தொழிலாளி. இவர் அதே ஊரில் வசிக்கும் அவரது உறவினர் இளையராஜா என்பவரின் பராமரிப்பில் வசித்து வந்தார். நேற்று மாலை அப்பகுதியில் உள்ள சூரியகாந்தி தோட்டத்தில் பெரியக்காள் உள்பட 7 ெபண்கள் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் திடீரென மழை பெய்தது. மேலும் மின்னல் தாக்கியதில் பெரியக்காள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதே ஊரை சேர்ந்த ரோகினி(15) என்ற சிறுமிக்கு காயம் ஏற்பட்டது. மற்ற 5 பேரும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பின்றி உயிர் தப்பினர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து பெரியக்காளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்-மகன் படுகாயம்

இதேபோல் துறையூரை அடுத்துள்ள கோம்பை புதூரை சேர்ந்த சுந்தர்ராஜின் மனைவி சூரியகலா(32). இவர்களுக்கு லித்திக்ராஜ்(4) என்ற மகன் உள்ளார். சுந்தர்ராஜ் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று சூரியகலா, தனது மகனுடன் தங்களது வயலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பியபோது, திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு துறையூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story