பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்


பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்
x

கோப்புப்படம் 

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நாள் முதல் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி, பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.

அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் என்று அடிப்படையில் 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது வரை பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படும். இவற்றில் ஏதேனும் குறைகள் இருப்பின் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மாணவர்கள் தெரிவிக்கலாம். இதனை தொடர்ந்து ஆகஸ்டு 16-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story