கொலைமுயற்சி வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு


கொலைமுயற்சி வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
x

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை தாக்கி கொலை முயற்சி வழக்கில் 3 குற்றவாளிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்எட்டிகுப்பம் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 52). இவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் முனியம்மாள் (38) என்பவருக்கும் இடையே சீட்டு பணத்திற்கு வட்டி தொகை வாங்குவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு அன்று மஞ்சுளாவின் குடும்பத்தாருக்கும், முனியம்மாளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முனியம்மாளுக்கு ஆதரவாக அதே கிராமத்தைச் சேர்ந்த மாதவன், ஏழுமலை, சுரேஷ் உள்பட 17 பேர் சேர்ந்து மஞ்சுளா, அவரது கணவர் ஆனந்தன், மகன் வேலாயுதம் ஆகிய மூவரையும் இரும்பு கம்பி மற்றும் கட்டையால் பலமாக தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் 17 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக திருத்தணி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கின் வாதங்கள் முடிவுற்றதையடுத்து, சார்பு நீதிபதி காயத்திரி தேவி, வேலாயுதம், மஞ்சுளா, ஆனந்தன் ஆகிய 3 பேரை தாக்கிய வழக்கில் மாதவன், சுரேஷ், குட்டியப்பன் ஆகிய 3 பேருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டணையும், தலா ரூ.11,500 அபராதம் விதித்தார் மேலும் பாலு, நாராயணன், சந்திரன், அர்ஜூனன், ஆறுமுகம், முரளி ஆகியோருக்கு தலா ரூ.9,500 அபராதமும், முனியம்மாள், மணிகண்டன், சேட்டு, தர்மன், பொன்னுரங்கம், சின்பட்டு, ஏழுமலை ஆகியோருக்கு தலா ரூ.7,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் எஸ்.லட்சுமணன் ஆஜராகி வாதாடினார்.


Next Story