கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி


கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி
x

கோப்புப்படம் 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 26-ம் தேதி அதிகாலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த நிகழ்வைக் காண வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், குடிநீர் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அனுமதி சீட்டு இல்லாமல் பக்தர்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.


Next Story