தொடக்க கல்வி மட்டுமே அடிப்படை உரிமை, உயர்கல்வி அடிப்படை உரிமை அல்ல - ஐகோர்ட்டு கருத்து
![தொடக்க கல்வி மட்டுமே அடிப்படை உரிமை, உயர்கல்வி அடிப்படை உரிமை அல்ல - ஐகோர்ட்டு கருத்து தொடக்க கல்வி மட்டுமே அடிப்படை உரிமை, உயர்கல்வி அடிப்படை உரிமை அல்ல - ஐகோர்ட்டு கருத்து](https://media.dailythanthi.com/h-upload/2023/11/08/1590690-state-05.webp)
6 வயது முதல் 14 வயது வரை தொடக்க கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை,
தமிழகத்தில் சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், தமிழகத்தில் 15 அரசு சட்டக்கல்லூரிகளும், 9 தனியார் சட்டக்கல்லூரிகளும், 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப்படிப்பை வழங்கி வரும் நிலையில், புதிதாக 11 தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தனியார் சட்டக்கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 24-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், 6 வயது முதல் 14 வயது வரை தொடக்க கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை என்றும், உயர்கல்வி பெறுவது அடிப்படை உரிமை அல்ல என்றும் கருத்து தெரிவித்தனர்.