செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு


செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:46 PM GMT)

செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

செட்டியக்காபாளையத்தில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் ஆண்டிபாளையம், கப்பிணிபாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்குக்காடு, தேவணாம்பாளையம், செட்டியக்காபாளையம், கோதவாடி, பட்டணம், நல்லட்டிபாளையம், மாசநாயக்கன்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் தென்னை மரங்கள் கருகிய நிலைக்கு வந்தது. மேலும் மழை பெய்து இருந்தால் விவசாய நிலங்களில் விவசாயிகள் உழவு செய்து கம்பு, சோளம், நிலக்கடலை, தக்காளி, வெண்டைக்காய், கத்தரி, பொறியல் தட்டை, பச்சை மிளகாய், உள்பட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து இருப்பார்கள். மழை இல்லாததால் விவசாய நிலங்களை உழவு செய்யக்கூட முடியாமல் உள்ளது. இந்தநிலையில் இரண்டு மாதங்களாக மழை எப்போது வரும் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் எதிர்பாத்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் விளைநிலங்களில் எந்த வித பயிர்வகைகளும் சாகுபடி செய்யவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் பி.ஏ.பி. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று முன்தினம் செட்டியக்காபாளையம் கிளைவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் 7 நாட்களுக்கு தொடர்ந்து வருவதாலும், பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் தண்ணீர் வருவதாலும் விவசாய பணிகளை தொடங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story