எடப்பாடி பழனிசாமிக்கு தலைமையை ஓ.பி.எஸ் விட்டு கொடுக்க வேண்டும் - அ.தி.மு.க எம்எல்ஏ ராஜன் செல்லப்பா


எடப்பாடி பழனிசாமிக்கு தலைமையை ஓ.பி.எஸ் விட்டு கொடுக்க வேண்டும் - அ.தி.மு.க எம்எல்ஏ ராஜன் செல்லப்பா
x
தினத்தந்தி 18 Jun 2022 8:20 AM GMT (Updated: 18 Jun 2022 8:20 AM GMT)

எடப்பாடி பழனிசாமிக்கு தலைமையை ஓ.பி.எஸ் விட்டு கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்து உள்ளார்.

மதுரை,

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கூறியதாவது,

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற விவாதம் எழுந்து உள்ளது. அதனால் அதற்கு முடிவு ஏற்பட பொது குழுவில் வாய்ப்புள்ளது. சட்டத்தில் மாறுதல் செய்வது தவறில்லை சட்ட திருத்தம் செய்வது புதிதல்ல. மாவட்டச் செயலாளர் 90 சதவீதம் பேர் ஒற்றை தலைமையை எதிர்பார்க்கின்றனர்.

நல்ல தலைமையை உருவாக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டே ஒற்றைத் தலைமையின் கீழ் வர வேண்டும் என தான் கூறினேன். பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுப்பதை ஏற்று ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும். அது கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சரி.

நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகார பூர்வமான கூட்டம் இல்லை. எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பிறகு

ஜானகி அம்மாள் பெருந்தன்மையாக கட்சியை ஜெயலலிதாவுக்கு விட்டு கொடுத்தது போல் திறமையானவர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும்.

கட்சியை கட்டிக் காப்பாற்றும் ஒருவருக்காக மற்றொருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும். எம்.ஜி.ஆருக்கு பின் ஜெயலலிதா தனிக்கட்சி ஆரம்பித்தபோது சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை சிறப்பாக நடத்தியவருக்கு மற்றவர் தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story